திருப்பூர், செப் 10: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் திருப்பூர் வந்து செல்லும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் ஓணம் பண்டிகையை ஒட்டி 6 சிறப்பு ரயில்கள் அறிவித்துள்ளது. கேரளா செல்ல சென்னை - கொச்சுவேலி சிறப்பு ரயில் 11ம் தேதி இரவு 10 மணிக்கு திருப்பூர் வந்து மறுநாள் காலை எர்ணாகுளம் சென்றடைகிறது. இதே நாளில் மற்றொரு சிறப்பு ரயில் நள்ளிரவு 1 மணிக்கு திருப்பூர் வந்து காலையில் கொச்சுவேலி சென்றடைகிறது. கொச்சுவேலி- சென்னை ரயில் 11ம் தேதி அதிகாலை 2.05 மணிக்கு திருப்பூர் வருகிறது. அடுத்த நாள் காலை 10 மணிக்கு சென்னை செல்கிறது. செப்டம்பர் 12ம் தேதி இரவு எர்ணாகுளத்தில் இருந்து திருப்பூர் வரும் ரயில் மறுநாள் காலை சென்னை சென்று சேருகிறது. இதேபோல் 12ம் தேதி இரவு 8 மணிக்கு திருப்பூர் வரும் ரயில் மறுநாள் காலை 5.25 மணிக்கு சென்னை சென்றடையும். சிறப்பு ரயில்கள் வந்து செல்லும் நேரம் குறித்த அறிவிப்பை அந்தந்த ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள தகவல் மையத்தில் பயணிகள் தெரிந்து கொள்ளலாம். அதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது என ரயில்வே தகவல் மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.