காரிமங்கலம், செப்.10: காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நாள்தோறும் பாலக்கோடு, காரிமங்கலம், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பஸ்களில் சென்று வருகின்றனர். ஆனால், அனுமந்தபுரம் வழியே குறைவான பஸ்களே இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக காலை நேரங்களில் போதுமான பஸ்கள் இல்லாததால், கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். வேலைக்கு செல்பவர்களும், குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, அனுமந்தபுரம் வழியாக காரிமங்கலம் மற்றும் பாலக்கோட்டுக்கு காலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.