தர்மபுரி, ஜூன் 18: தர்மபுரி அருகே கந்துவட்டி கொடுமை செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி, குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி மனு கொடுத்துள்ளார்.அரூர் அருகே நவலை கிராமத்தை சேர்ந்த சிவகுமார் மனைவி சிவகாமி(34). இவர் நேற்று கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:எனது கணவர் சிவகுமார், நவலை பகுதியில் உள்ள பெண் சத்துணவு அமைப்பாளரிடம் ₹20 ஆயிரம் கடன் வாங்கினார். அந்த கடனுக்கு 2 வருடங்களாக வட்டி செலுத்தி வருகிறோம். இந்நிலையில், கடன் கொடுத்த சத்துணவு அமைப்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர், திடீரென எங்களை தகாத வார்த்தைகளால் பேசி ₹1 லட்சம் பணத்தை 10 சதவீத வட்டியுடன் தர வேண்டும் என்று கேட்டு, என்னையும், கணவரையும் தாக்கினர். இது தொடர்பாக கடந்த 15ம் தேதி, கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். எனவே, எங்களை கந்து வட்டி கொடுமையில் இருந்து காப்பாற்றி உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இதேபோல், பென்னாகரம் அருகே நாகமரையை சேர்ந்த பள்ளி மாணவி ஜனனி(16) என்பவர் கொடுத்த மனு: எனது தந்தை அய்யாசாமி பெயிண்டராக உள்ளார். நான் நெருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறேன். எங்கள் குடும்பத்தினருக்கும், அருகே உள்ள குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 12ம் தேதி மீண்டும் தகராறு நடந்தது. அப்போது, வீட்டில் தனியாக இருந்த என்னை கொலை செய்வதாக பக்கத்து வீட்டினர் மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக ஏரியூர் போலீசில் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசில் புகார் செய்த பின்னரும், எங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால், எனது பாட்டி வீட்டில் தங்கியுள்ளோம். எனவே, எனக்கும், எனது பெற்றோரின் உயிருக்கும் பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.