×

அய்யம்பாளையம் பகுதியில் தேங்காய் சீசன் தொடக்கம்

பட்டிவீரன்பட்டி, ஜூன் 13: அய்யம்பாளையம் பகுதியில் தேங்காய் சீசன் துவங்கியுள்ளது. வரத்து இருந்தும் விலை குறைந்ததால் தென்னை விரசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, சேவுகம்பட்டி, அய்யம்பாளையம், மருதாநதி அணை பகுதி, சித்தரேவு, சித்ததையன்கோட்டை, எம்.வாடிப்பட்டி, சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி, சாலைபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மரங்கள் பிரதான விவசாயமாகும்.இப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. அய்யம்பாளையத்தில் மொத்தமாக விவாசாயிகளிடமிருந்து பெறும் தேங்காய்களை மும்பை மற்றும் காங்கேயம் பகுதிகளுக்கு அனுப்பும் குடோன்கள் அதிகளவில் உள்ளன. மேலும் தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் தென்னை சார்ந்த தென்னம்பாலை செய்தல், கிடுகு பின்னுதல், தென்னை மட்டைகளிலிருந்து கயிறு தயாரித்தல் போன்ற தொழில்களை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் உள்ளனர். இப்பகுதியில் தொடர்ந்து மழையின்றி வறட்சியான சூழ்நிலை நிலவி வருவதால் கிணறுகளில் தண்ணீர் வற்றியுள்ளது. ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து வரும் தண்ணீரைக் கொண்டு சொட்டு நீர் பாசனம் மூலமாக தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து வரும் தண்ணீரும் குறைந்து வருவதால் புதிதாக ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து வருகின்றனர்.தற்போது தேங்காய் சீசன் ஆரம்பித்துள்ளது. தென்னந்தோப்புகளில் தேங்காய்கள் அதிகளவில் வரத்து வரத்துவங்கியுள்ளது. வரத்து அதிகரித்துள்ள நிலையில் விலை சரிந்து வருகின்றது.

இதனால் தென்னந்தோப்புகளிலும், மொத்த கொள்முதல் செய்யும் குடோன்களில் தேங்காய்கள் விற்பனை இன்றி குவித்து வைக்கப்பட்டுள்ளன. சென்ற வாரம் உயர்வில் இருந்த தேங்காய் விலை தற்போது குறைந்து வருகின்றது. இப்பகுதியில் விளையும் தேங்காய்கள் எண்ணெய் எடுப்பதற்காக காங்கேயத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இந்தியாவில் தென்னை சாகுபடி மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக தென்னை விவசாயம் அதிகம் நடைபெற்று வருகின்றது.
காங்கேயத்தில் கொப்பரை உலர்களம் மற்றும் தேங்காய் எண்ணை மில்கள் அதிகமாக உள்ளதால் காங்கேயம் மார்க்கெட்டில் நிர்ணயிக்கப்படும் விலையின் அடிப்படையில் தென்னை சார்ந்த பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கப்படுகின்றது. தமிழகத்தில் தேங்காய் வரத்து குறைவால் உயரவேண்டிய தேங்காய் விலை குறைந்து வருகிறது.காங்கேயம் மார்க்கெட்டில் சில வாரங்களுக்கு முன்பு மரத்திலிருந்து பறித்த தேங்காய் ஒன்றிற்கு ரூ.13 ஆக இருந்த விலை தற்போது ரூ.8 முதல் 9 வரை குறைந்துள்ளது. பறித்து உரித்த தேங்காய் டன் ஒன்றிற்கு கடந்த மாதம் ரூ.24 வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது விலை டன் ஒன்றிற்கு ரூ.22 ஆயிரமாக குறைந்துள்ளது. மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.உயர்ந்து வந்த தேங்காய் விலை தற்போது குறைந்து வருவதால் தேங்காய் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தென்னை விவசாயிகள் பாதிப்பை தடுக்க அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இப்பகுதியில் தமிழக அரசு கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Coconut season ,area ,Ayyambalayam ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு