×

தர்மபுரி நகரில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மீது வழக்கு

தர்மபுரி, ஜூன் 13: தர்மபுரி நகரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற, 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தர்மபுரியில், அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும் ஜூன் 1ம் தேதி முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என, தர்மபுரி டிஎஸ்பி ராஜ்குமார் அறிவுறுத்தியிருந்தார். இதையொட்டி, கடந்த 3ம் தேதி தர்மபுரி நகரில், ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்த போலீசார், ஹெல்மெட் அணிவோம் என உறுதிமொழி எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். ஆனாலும், தர்மபுரி நகரில் 95 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமலேயே இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தனர். இதையடுத்து, எஸ்பி ராஜன் உத்தரவின் பேரில், நேற்று தர்மபுரி போக்குவரத்து எஸ்ஐக்கள் செந்தில்குமார், தங்கம் உள்ளிட்ட போலீசார், தர்மபுரி நான்குரோடு உள்பட நகர் முழுவதும் பல்வேறு இடங்களில், தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் ஹெல்மெட் அணியாத நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags : city ,Dharmapuri ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்