×

காங்கயம் காவல் நிலையத்தை சுற்றி குளம்போல தேங்கி நிற்கும் சாக்கடை நீர்

காங்கயம்,ஜூன்13: காங்கயத்தில் நடைபெற்று வரும் சாக்கடை கட்டுமானப் பணி காரணமாக காவல்நிலையத்தை சுற்றி குளம்போல சாக்கடை நீர் தேங்கி நின்று சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. காங்கயம் நகரில் பங்களாபுதூர், களிமேடு, உடையார் காலணி, கோவை ரோடு பகுதிகளிலிருந்து வெளியேறும் சாக்கடை நீர் வழியாக வந்து போலீஸ் ஸ்டேசன் ரவுண்டானா வழியாக அகிலாண்டபுரம் குளத்தை அடைகிறது. இந்நிலையில் போலீஸ் ஸ்டேசன் ரவுண்டானா அருகே கரூர் ரோட்டில் சாக்கடை நீட்டித்து கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. இதனால் சாக்கடையை அடைத்து வைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக சாக்கடையில் வரும் கழிவுநீர் தொடர்ந்து செல்ல வழியில்லாமல் அகிலாண்டபுரம் செல்லும் ரோட்டில் குளம்போல தேங்கி நிற்கிறது. இதிலிருந்து ஈக்கள், கொசுக்கள் அப்பகுதியில் பறந்து சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருவதுடன் அகிலாண்டபுரம், சாம்பவலசு உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சாக்கடை தண்ணீரில் நீந்திச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை தண்ணீரை செப்டிக் டேங்க் சுத்தம்  செய்யும் வாகனங்கள் மூலம் அகற்றுவதாகக் கூறினாலும் இதுவரை அந்தப் பணிகளைச் செய்யவில்லை. தற்போது கோடை மழைச்சாரல் விழும் நிலையில் சிறிய அளவில் மழை பெய்தாலும் அதிகளவில் சாக்கடையில் கழிவு நீர் பெருக்கெடுத்து சுகாதார கேட்டை ஏற்படுத்தும் நிலை உள்ளதால் விரைவாக சாக்கடை பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : police station ,Kangai ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...