×

திருப்பூர், தாராபுரத்தில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 12:பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் கல்லூரி ரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சாலை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை 13 ஆண்டுகளுக்கு மேலாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்துவதை கண்டித்தும், கோரிக்கைகளை முன்வைத்து போராடும் சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், போலீஸ் மூலம் வழக்கு பதிவு செய்து மிரட்டும் தமிழக அரசை கண்டித்தும், சாலை பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு உரிய ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர், கல்லூரி ரோட்டிலுள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் சிவக்குமாரன் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் ராமன், சத்துணவு ஊழியர் சங்க தலைவர் மகேந்திர பூபதி, ஆகியோர் கண்டன உரையாற்றினர். ரோஸ்மேரி, ராணி உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். தாராபுரம்:தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தினர். இதில் தாராபுரம், மூலனூர், வெள்ளகோவில், மடத்துக்குளம், உடுமலை உள்ளிட்ட உட்கோட்ட சாலை பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில்  கலந்து கொண்டனர்.

Tags : Street Workers ,Tirupur ,Tharapoor ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...