விருதுநகர், ஜூன் 11: விருதுநகர் அருகே, எரிச்சநத்தத்தில் உள்ள மாசாணி அம்மன் கோயிலை இந்து அறநிலையத்துறை ஏற்க பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விருதுநகர் அருகே, எரிசநத்தத்தில் ஸ்ரீமசாணி அம்மன் தியான பீடம் உள்ளது. இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பலமுறை மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன் நேற்று விசாரணை நடத்துவதாக அறிவித்து இருந்தார். இதனடிப்படையில், விருதுநகர் சிவன்கோயிலில் நேற்று விசாரணை நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தியான பீடத்தை இந்து சமய அறநிலையத்துறை ஏற்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், ‘2004ல் எரிச்சநத்தம் கிராமத்தில் ஸ்ரீமாசாணி அம்மனுக்கு பீடம் அமைக்கப்பட்டது. இந்த பீடத்தில் இந்து சமய ஆகம விதிகள் பின்பற்றப்படுவதில்லை. கோபுரம், கொடிமரம், உண்டியல் பீடத்தில் இல்லை. தனிப்பட்ட நபரின் காழ்ப்புணர்ச்சியில், தவறான புகாரின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை உரிய விசாரணை நடத்தாமல், சட்டத்திற்கு புறம்பாக கைப்பற்ற நினைக்கிறது. ஆட்சேபணை தெரிவித்த அனைவரையும் அழைத்து விசாரிக்காமல், ஒரு தலைப்பட்சமாக சிலருக்கு மட்டும் கடிதம் அனுப்பி விசாரணைக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த சமய அறநிலையத்துறையின் செயல் கண்டிக்கத்தக்கது’ என தெரிவித்தனர்.
