×

தர்மபுரியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்களால் விபத்து அபாயம்

தர்மபுரி, ஜூன் 11: தர்மபுரி நகரில், சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, விபத்து அபாயமும் நிலவுகிறது. தர்மபுரி நகரில் வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப சாலை வசதி இல்லை. இதனால், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள், சரக்கு ஆட்டோக்கள், கார்கள் பிரதான சாலைகளை ஆக்கிரமித்தபடி பல இடங்களில் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பது வாடிக்கையாகி வருகிறது. தர்மபுரி பஸ் நிலையம், பூங்கா, அரசு மருத்துவமனை உள்ளிட்ட அதிக மக்கள் கூடும் இடங்களில், வழிகளை மறித்து ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, தர்மபுரி நகர கடைவீதிகளில் சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

இதேபோல், தர்மபுரி அரசு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதியில், சாலையை மறித்தபடி ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் நோயாளிகள் வரும் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்சுகளுக்கு இடையூறாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தர்மபுரி நகரில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி முழுமையாக அகற்றவும், தேவையுள்ள இடங்களில் சாலையை விரிவுபடுத்தவும் வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்த தனி இடங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிக நிறுவனங்களில் வாகனங்களை நிறுத்த தனியிடங்களை உருவாக்க அறிவுறுத்த வேண்டும்,’ என்றனர்.

Tags : roads ,Dharmapuri ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி