×

மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை

ஈரோடு, ஜூன் 7:மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பியிடம் தாய் நேற்று புகார் மனு அளித்தார். ஈரோடு  பெரியார்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி லட்சுமி (55).  இவர் நேற்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி சக்திகணேசனிடம் அளித்த  மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். எனது மகன்  துரைசாமிக்கு (32) இதே பகுதியைச் சேர்ந்த அபிநயா என்பவருடன் திருமணம்  நடந்தது. எனது மகன் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். மாமனார் தங்கவேல்  வீட்டிற்கு துரைசாமி அடிக்கடி சென்று வந்தார். தங்கவேலுவிற்கும், இதே  ஊரைச் சேர்ந்த மற்றொரு குடும்பத்திற்கும் பெண் கொடுப்பதில் தகராறு இருந்து  வந்தது.
எனது மகன் துரைசாமி அடிக்கடி மாமனார் வீட்டிற்கு செல்வதை அறிந்த  அந்த குடும்பத்தினர் எனது மகனிடம் தகராறு செய்தனர். கடந்த 5ம் தேதி இரவு 8  மணிக்கு எனது மகன் துரைசாமி மாமனார் வீட்டிற்கு சென்றபோது அவரை வழிமறித்து  தாக்கி உள்ளனர். இதுதவிர, பைக்கையும், 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும்  பறித்துக் கொண்டனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த எனது மகன் துரைசாமி  சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனது மகனை  தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

Tags : victim ,
× RELATED கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி: இருவர் காயம்