கிருஷ்ணகிரி, ஜூன் 4: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், கிருஷ்ணகிரி குடிநீர் வண்டி ஓட்டுனர்கள் கூட்டமைப்பு சார்பில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது. இதனால், குந்தாரப்பள்ளி அருகிலிருந்து டேங்கர் பொருத்தப்பட்ட டிராக்டரில் தண்ணீர் எடுத்து சென்று, விநியோகம் செய்யப்படுகிறது. அப்பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில், குடிநீர் கொண்டு செல்லும் டிராக்டர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
இதுகுறித்து சுங்க அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், கட்டணத்தை கட்டாயம் செலுத்த வேண்டும் என்று கூறி விட்டனர். குடிநீர் தட்டுப்பாடுள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளுக்கும், ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதன்பேரில், குடிநீரை குறைந்த விலையில் நாங்கள் சப்ளை செய்து வருகிறோம். சுங்க கட்டணம் வசூலிப்பதால், அதற்கான பணத்தையும் பொதுமக்களிடம் சேர்த்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, தண்ணீர் ஏற்றி வரும் டேங்கர் டிராக்டர்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.