×

மாவட்டத்தில் நீட் தேர்வை 5,006 மாணவர்கள் எழுதினர்

கிருஷ்ணகிரி, மே 6: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று (5ம் தேதி) 8 மையங்களில் நடந்த இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வினை 5,006 மாணவ, மாணவிகள் எழுதினர்.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ்., பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை “நீட்” நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அதன்படி, 2024-2025ம் கல்வியாண்டிற்கான “நீட்” நுழைவு தேர்வு, நேற்று (5ம் தேதி) நடந்தது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 10ம் தேதி வரை நடந்தது. தேர்வை எழுத 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். நேற்று (5ம் தேதி) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை (3 மணி 20 நிமிடம்) தேர்வு நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடந்தது. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா 180 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம் பெற்றிருந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 8 மையங்களில் இந்த “நீட்” நுழைவு தேர்வு நேற்று நடைபெறுகிறது. அதன்படி, ஊத்தங்கரை மல்லிகை நகரில் உள்ள அதியமான் பப்ளிக் பள்ளியில் 1440 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் 37பேர் தேர்வு எழுத வரவில்லை. 1403பேர் தேர்வினை எழுதினர். அதே போல் ஊத்தங்கரையில், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தீரன் சின்னமலை நகரில் உள்ள தீரன் சின்னமலை பப்ளிக் பள்ளியில் 1200 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் 1163 பேர் தேர்வினை எழுதினர். ஓசூர் அடுத்த முகுலப்பள்ளி வனபிரசாத் இண்டர்நேஷ்னல் பள்ளியில் 504 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் 489 பேர் தேர்வினை எழுதினர்.

அதே போல், குந்தாரப்பள்ளி ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 504 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் 490 பேர் தேர்வினை எழுதினர். ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் 480 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 457 பேர் தேர்வு எழுதினர். காவேரிப்பட்டணம் அடுத்த சவுளூர் கூட் ரோட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் பப்ளிக் பள்ளியில் 360 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், 347 பேர் தேர்வினை எழுதினர். ஓசூர் அடுத்த நல்லூர் ஸ்ரீ குருகுலம் செகண்டரி பள்ளியில் 360 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் 20 பேர் தேர்வு எழுத வரவில்லை.

340 பேர் மட்டுமே தேர்வினை எழுதினர். கிருஷ்ணகிரி சுபேதார்மேடு பாரத் இண்டர்நேஷ்னல் சீனியர் செகண்டரி பள்ளியில் 328 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், 317 பேர் தேர்வினை எழுதினர். இவ்வாறு மொத்தம் 8 மையங்களில் 5,176 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், 170 பேர் தேர்வினை எழுத வரவில்லை. 5,006 பேர் தேர்வினை எழுதினர். தேர்வு மையங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு மையத்திற்குள் நுழைய கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு எழுத வந்த மாணவர்கள் பெரும்பாலானோர், காலை 10 மணி முதலே தேர்வு மையத்திற்கு, தங்களது பெற்றோர்களுடன் வந்து குவிந்தனர்.

The post மாவட்டத்தில் நீட் தேர்வை 5,006 மாணவர்கள் எழுதினர் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri district ,MBBS ,BDS ,
× RELATED ஆடு, மாடு, கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு முறைகள்