×

பர்கூர் அருகே பெண் கொன்று வீச்சு குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு

கிருஷ்ணகிரி ,மே 29:  பர்கூர் பெண் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ளது ஒப்பதவாடி கூட்டு ரோடு. கிருஷ்ணகிரி -சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.மர்ம நபர்கள் அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்து உடலை சாலையோரத்தில் வீசி சென்றுள்ளனர். கொலையுண்ட பெண்ணின் உடலை பர்கூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட பெண் யார்? அவரை கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் மாவட்ட எஸ்.பி., பண்டி கங்காதர் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் பர்கூர் டி.எஸ்.பி ராஜேந்திரன் மேற்பார்வையில் பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்ஐ பச்சமுத்து, சிறப்பு எஸ்ஐக்கள் திருப்பதி, அமரன், மற்றும் போலீசார் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவர்கள் கொலையுண்ட பெண்ணின் புகைப்படத்துடன் துண்டுபிரசுரங்களை அச்சடித்து தமிழக, கர்நாடக, ஆந்திர மாநில போலீஸ் நிலையங்களுக்கு வழங்கி உள்ளனர். மேலும் பெண் காணாமல் போனதாக வழக்கு எதேனும் பதிவாகி உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீசார் கூறியதாவது: கொலையுண்ட பெண் நீல நிற சுடிதார் அணிந்திருந்தார். காலில் கருப்பு கயிரும், கழுத்தில் கருப்பு மணியும் கட்டி இருந்தார். அவர் தமிழகத்தைச் சேர்ந்தவரா அல்லது பக்கத்து மாநிலமான கர்நாடகா அல்லது ஆந்திராவை சேர்ந்தவரா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இதற்காக ஆந்திர மாநிலம் குப்பம் சுற்று வட்டார பகுதிகளிலும், கர்நாடக மாநில பகுதிகளிலும் யாரேனும் காணாமல் போய் உள்ளார்களா? என விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொலையுண்ட பெண்ணின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் பிடிபடுவார்கள். மேலும் கொலையுண்ட அந்த பெண் பணம், நகைக்காக கொலை செய்யப்பட்டாரா, அல்லது காதல் விவகாரமா, என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினார்கள்.

Tags : freak organization ,Bargar ,
× RELATED பர்கூர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் தீ நகை, பணம் எரிந்து நாசம்