×

ஒகேனக்கல்லில் குவியும் சுற்றுலா பயணிகள்

பென்னாகரம், மே 28:  தமிழகம் முழுவதும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை முடியும் தருவாயில் உள்ளது. இதனால், சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, கடந்த ஒரு மாதமாக சுற்றுலா பயணிகள் எண்ணிகை அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், திரளான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்தும், முதலை பண்ைண, மீன் காட்சியகம், தொங்குபாலம் உள்ளிட்டவற்றை கண்டு களித்தனர். பின்னர், குடும்பத்தினருடன் பரிசல் சவாரி செய்து, காவிரியின் அழகை கண்டு ரசித்தனர். திரளான சுற்றுலா பயணிகள் வருகையால், மீன், டிபன் மற்றும் தள்ளுவண்டி கடைகள், விடுதிகளின் உரிமையாளர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சமையல் செய்பவர்கள், மசாஜ் செய்பவர்கள் மற்றும் பரிசல் ஓட்டிகளுக்கு கணிசமான வருவாய் கிடைப்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் திரண்டதையொட்டி, ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் தண்டபாணி தலைமையில் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா