×

புதுவையில் பள்ளிகள் திறப்பு தாமதமாகுமா?

புதுச்சேரி,  மே 25: புதுவையில் நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே  இருக்கிறது. இதனால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வெளியே தலைகாட்ட  முடியாத அளவுக்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. வீடுகளில் முடங்கி  கிடக்கும் மக்களும் அனல்காற்றால் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால்  இயற்கை குளிர்பானங்களான பழச்சாறுகள், தர்பூசணி, நுங்கு, வெள்ளரிக்காய் மற்றும்  ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை அருந்தி உடல் வெப்பத்தை தணித்து வருகின்றனர். மேலும் மாலை  நேரங்களில் பீச், பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுதை  கழித்து வருகின்றனர். இதனிடையே புதுவையில் கோடை விடுமுறைக்குபின் ஜூன்  3ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.  தமிழகத்தில் பள்ளி திறப்பு தள்ளி போகுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில்,  அறிவித்தபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கடந்த ஒருவாரமாக வெயிலின் தாக்கம்  அதிகமாக இருப்பதோடு, மாணவர்களுக்கான நோட்டு, புத்தகம் இதுவரை வந்துசேராத  நிலையும் உள்ளது. இதனால் பள்ளி திறப்பு தாமதமாகுமா? என்ற எதிர்பார்ப்பு  மக்களிடம் எழுந்துள்ளது.
இதுபற்றி கல்வித்துறை வட்டாரத்தில்  விசாரித்தபோது, பள்ளிகளை திறப்பதற்கு இன்னும் 10 நாட்கள் வரை உள்ளது.  அதற்குள் நோட்டு, புத்தகம் வாங்கப்பட்டு விடும். இந்த காரணத்திற்காக பள்ளி  திறப்பு தள்ளிபோக வாய்ப்பில்லை என்றனர்.

Tags : opening ,schools ,New Delhi ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு