அரியலூர், மே 14: கோடை காலத்தையொட்டி அரியலூர் பகுதியில் வெளிமாவட்டத்தில் இருந்து வந்த பெரிய நெல்லிக்காய் விற்பனை ஜோராக நடக்கிறது. ஒரு கிலோ ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
அரியலூர் பகுதியில் கடந்த 2 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது அக்னி நட்சத்திர வெயிலால் தொண்டை வறண்டும், சருமங்கள் உலர்ந்தும், வியர்வையால்தினம்தோறும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் கோடை வெயிலுக்கு உகந்த பெரிய நெல்லிக்காய் விற்பனை அரியலூர் பகுதியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போ ஹைட்ரேட் போன்றவைகள் வளமாக நிறைந்துள்ளது. பெரிய நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையும். ஞாபக சக்தியை அதிகரிக்கும், ரத்த சோகை நீங்கும். பெரிய நெல்லிக்காய் சித்த மருத்துவத்துக்கான சிறந்த மருந்தாக பயன்பட்டு வருகிறது. பழங்காலத்தில் தமிழகத்தில் தான் அதிகமாக நெல்லிக்காய் விளைந்தது. தற்போது போதுமான தண்ணீர் இல்லாமலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் பெரிய நெல்லிக்காய் மரங்கள் பட்டுப்போய் விட்டன. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பெரிய நெல்லிக்காய் மரங்கள் அழிந்துவிட்டது. தற்போது வெளி மாவட்டத்திலிருந்து விற்பனைக்காக வந்துள்ளது. தண்ணீர் இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறைந்தால் இன்னும் சில ஆண்டுகளில் அரியலூர் மாவட்டத்தில் பெரிய நெல்லிக்காய் மரங்களே அழிந்து போகும் நிலை ஏற்பட
வாய்ப்புள்ளது.