செந்துறை, மே 14: மூன்று மாத கால அவகாசத்துடன் பெரியாக்குறிச்சி சாலையில் முந்திரிக்காட்டில் மீண்டும் டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்பட்டது. அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் இருந்த டாஸ்மார்க் கடை இருந்தது. நெடுஞ்சாலையில் கடை அமைந்திருந்தால் கடந்தாண்டு மூடப்பட்டது. இந்நிலையில் சிறுகளத்தூர் கிராமம் பெரியாகுறிச்சி சாலையில் முந்திரி காட்டில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதன் அருகில் பல சில்லரை கடைகளும் திறக்கப்பட்டன.
இதனால் நேற்று முன்தினம் மதியம் டாஸ்கடையை திறக்க விடாமல் அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்ததும் செந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடையை நிரந்தரமாக மூட வேண்டுமென பெண்கள் கூறினர். மேலும் பெண்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால் நேற்று தற்காலிகமாக டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
இந்நிலையில் பெண்களுடன் நேற்றும் உடையார்பாளையம் ஆர்டிஓ ஜோதி, செந்துறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை மூடுவதற்கு 3 மாதம் காலஅவகாசம் வேண்டும். 3 மாதத்துக்குள் டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்படும் என்றனர். இதற்கு பெண்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.