×

பெரம்பலூர் அருகே லாரி கவிழ்ந்து சாலையில் டீசல் ஆறாக ஓடியது

பெரம்பலூர், மே 10: பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த டீசல் லாரி. சாலையில் டீசல் ஆறாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து விருதுநகர் நோக்கி டீசல் நிரப்பிய டேங்க்கர் லாரி ஒன்று நேற்று அதிகாலை திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள அரசம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் அகிலன்(27) என்பவர் ஓட்டி வந்தார். அதே ஊரை சேர்ந்த பெரியசாமி மகன் அறிவழகன்(19) கிளீனராக இருந்தார்.

இந்த டீசல் லாரி நேற்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர்அருகே சென்ற போது சாலையை கடப்பதற்காக குறுக்கே நடந்துவந்த ஒருவர்மீது மோதிவிடாமல் இருப்பதாற்காக அகிலன் லாரியை சற்று திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சிறுவாச்சூர் பஸ்நிறுத்தம் அருகே சரிந்து கவிழ்ந்தது. இதில் டேங்க்கர்லாரியில் இருந்த டீசல் லாரியின் 5மூடிகளின் வழியாக பொங்கி வழியத் தொடங்கியது.  இதனை பார்த்த அருகிலிருந்த பொதுமக்கள், கனரக வாகனங்கள் பழுது பார்க்கும்  ஊழியர்கள் குடங்களை, பாத்திரங்களை எடுத்துக்கொண்டு ஓடிவந்து வெளியே சிந்திய டீசலைப் பிடித்துக்கொண்டு ஓடினர்.

இவ்வாறு மட்டுமே 30லிட்டருக்குமேல் டீசல் சாலையில் வழிந்தோடியது. இதனைக்கண்ட நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தரையில் வழிந்தோடும் டீசல் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தால் லாரியே வெடித்து பெரும்விபத்து நேரும்என்பதை உணர்ந்து ஜேசிபி உள்ளிட்ட மீட்பு வாகனங்களைக் கொண்டுவந்து லாரியை நிமிர்த்தினர். இதில் லாரி கவிழ்ந்தபோது வெளியே விழுந்து படுகாயமடைந்த லாரி டிரைவர் அகிலன், கிளீனர் அறிவழகன் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக கொண்டுபோய் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags : Larry ,Perambalur ,road ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி