மண்ணச்சநல்லூர், மே 9: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ.96 லட்சத்து 61 ஆயிரத்து 436 மற்றும் 2 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி நகைகள் கணக்கிடப்பட்டன. சக்தி வழிபாட்டு தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் மாதமிருமுறை திறக்கப்பட்டு எண்ணப்படுகின்றன. நேற்று சமயபுரம் கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.
இதில் திருக்கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவிகள், தன்னார்வ தொண்டர்கள் உண்டியல் பணத்தை எண்ணி, தங்கம், வெள்ளி நகைகள், அயல்நாட்டு கரன்சிகளை கணக்கெடுத்தனர். இந்த கணக்கெடுப்பின் முடிவில், உண்டியலில் ரொக்கமாக ரூ.96 லட்சத்து 61 ஆயிரத்து 436 ரொக்கம், 2 கிலோ 558 கிராம் தங்க நகைகள், 9 கிலோ 300 கிராம் வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள் 101 ஆகியவை எண்ணப்பட்டன. இவை அனைத்தும் கோயில் கணக்கில் வரவு வைக்கப்பட்டன.