சேந்தமங்கலம், மே 3: புதன்சந்தையில் வாரந்தோறும் ஆட்டுச்சந்தை கூடுகிறது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆடு, கிடா மற்றும் குட்டி ஆகியவற்றை சந்தைக்கு விற்பனைக்கு ஓட்டி வருகின்றனர். இதை வாங்க நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் இறைச்சிக் கடைக்காரர்கள் வருகின்றனர். புதுசத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோயில்களில், தற்போது பண்டிகை நடைபெறுவதால், நேற்று முன்தினம் கூடிய சந்தைக்கு அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. தேவை அதிகரித்ததால் சந்தையில் ஆடுகள் விலையும் உயர்ந்தது. கடந்த வாரம் ரூ5,200க்கும் விற்பனையான 10 கிலோ எடை கொண்ட இறைச்சி ஆடு, இந்த வாரம் ரூ5,300க்கும், ரூ4,400க்கு விற்பனையான வளர்ப்பு ஆடு, இந்த வாரம் ரூ4,500க்கும், பிறந்து ஒருமாதமே ஆன பெண் குட்டி ஆடு ரூ1,200க்கும், கிடா குட்டி ரூ1,300க்கும் விற்பனையானது.