சேந்தமங்கலம், ஜூன் 13: புதன்சந்தையில் நேற்று விற்பனைக்கு ஆடுகள் வரத்து குறைந்ததால், விலை உயர்ந்தது. நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் நேற்று கூடிய ஆட்டுச்சந்தைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் ஆடு, கிடா மற்றும் குட்டிகளை விற்பனைக்காக ஓட்டி வந்தனர். இதை வாங்க நாமக்கல், கரூர், சேலம், ஈரோடு, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்தனர்.
தற்போது, கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்போர் ஆடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். நேற்று சந்தைக்கு குறைந்த அளவிலான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. இதனால் ஆடுகள் விலை உயர்ந்தது. கடந்த வாரம் ₹4,500 என விற்பனையான 10 கிலோ எடை கொண்ட இறைச்சி ஆடு, இந்த வாரம் ₹4,600 க்கும், கடந்த வாரம் ₹4,700 என விற்பனையான வளர்ப்பு ஆடு, இந்த வாரம் ₹4,800 க்கும், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குட்டி ஆடு ₹900 க்கும், கிடா குட்டி ₹1000 க்கும் விற்பனையானது.