×

தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் கலந்தாய்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவி மையம் தொடக்கம்

தர்மபுரி, மே 3: தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில், பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க ஆன்லைன் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2019- 2020-ம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில், பொறியியல் படிப்பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் சமர்ப்பித்தல் நேற்று தொடங்கியது. இதற்காக, தர்மபுரி செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள ஆண்கள் விடுதிக்கு எதிரில் உள்ள விளையாட்டு அரங்க கட்டிடத்தில், ஆன்லைன் உதவி மையம்  தொடங்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி வரை செயல்படும் இந்த மையம், தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் ₹500, பட்டியலின மாணவர்கள் ₹250 கட்டணத்தை வங்கி வரைவோலை அல்லது ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் செலுத்த வேண்டும்.

இதற்காக டெபிட் கார்டு, அந்தக் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எடுத்து வரவேண்டும். வரைவோலையாக செலுத்துபவர்கள் தி செக்ரட்ரி, டிஎன்இஏ சென்னை, என்ற பெயருக்கு செல்லத்தக்க வகையில் இருக்க வேண்டும். ஆன்லைன் பதிவுக்கு பிளஸ்2 மதிப்பெண், மாணவரின் செல்போன், மின்னஞ்சல் முகவரியுடன் வரவேண்டும். பதிவின்போது ஒரு முறை பயன்பாட்டு ரகசிய குறியீடு எண் மாணவர் குறிப்பிடும் செல்போன் எண்ணுக்கு வரும். எனவே, மாணவர்கள் தங்களின் செல்போனை கண்டிப்பாக எடுத்து வரவேண்டும். பின்னர், ஆன்லைனில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகல் வழங்கப்படும். வரும் ஜூன் 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்களின் அனைத்து அசல் சான்றிதழ்களும், உதவி மையத்தில் சரிபார்க்கப்படும்.

Tags : Dhammapuri Government Engineering College ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா