திருவாரூர், மே 3: தினகரன் செய்தி எதிரொலியாக திருவாரூர் அருகே கீழ மணலி சித்தாற்றில் புதிய பாலம் கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. திருவாரூர் அருகே கீழமணலி கிராமம் இருந்து வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இது மட்டுமின்றி அருகில் உள்ள சேந்தங்குடி, வடகரை உட்பட பல்வேறு கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு செல்லும் வழியில் கீழமணலியில் சித்தாறு எனப்படும் பாசன வாய்க்காலில் சிறு பாலம் ஒன்று இருந்து வந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த பாலத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் பெய்த கன மழையின் காரணமாக ஒருபக்க சுவர் பாதி வரையில் இடிந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.
இதன் காரணமாக அப்பகுதியில் மினி பேருந்துகள் கூட செல்ல முடியாமல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். மேலும் ஏதேனும் விபத்துக்கள் ஏற்பட்டால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. இது குறித்து அக்டோபர் மாதம் 10ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து தற்போது பொதுப்பணி துறையினர் மூலம் புதிதாக பாலம் கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.