மஞ்சூர், மே 1: மஞ்சகம்பை ஹெத்தையம்மன், நாகராஜர் கோயில் 47ம் ஆண்டு பூ குண்ட திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மஞ்சகம்பையில் ஹெத்தையம்மன், சத்திய நாகராஜர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் மே மாதம் நடக்கும் பூ குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றது. நடப்பாண்டு 47ம் ஆண்டு பூ குண்ட திருவிழா இன்று (1ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று கணபதி பூஜை, அகண்ட நாம பஜனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.
இதை தொடர்ந்து இன்று காலை பல்வேறு அபிஷேகங்களுடன் ஹெத்தையம்மன், சத்திய நாகராஜர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து பிற்பகல் 2மணிக்கு பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்நிலையில் குண்டம் இறங்குவதற்காக நேற்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து மஞ்சகம்பையில் குவிந்துள்ளனர். பிரசித்தி பெற்ற இந்த விழாவில் வெளி மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்பதால், விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து துறையின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வெற்றிசெல்வன் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.