₹1 லட்சம் பணம் கொள்ளைபாப்பிரெட்டிப்பட்டி, ஏப்.30: பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் புகுந்த மர்மநபர்கள் 3.5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ₹1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர்.தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொ.மல்லாபுரம் பேரூராட்சி அமீர்சாலை பகுதியை சேர்ந்தவர் சேகர்(50). அரசு பள்ளி ஆசிரியர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மெக்கானிக் தியாவுதீன்(45). கோடை விடுமுறையையொட்டி, சேகர் காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதேபோல் தியாவுதீன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த வேலையாக சென்னைக்கு சென்று விட்டார். இவரது மனைவி வெளியூர் சென்று விட்டார். நேற்று காலை தியாவுதீன் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும், சேகர் வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தியாவுதீன் பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் தொிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்தனர். வீட்டின் உரிமையாளர்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், நள்ளிரவில் சேகர் மற்றும் தீயாவுதீன் வீட்டில் நுழைந்துள்ளனர். இதில் தீயாவுதீன் வீட்டில் 3.5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ₹1 லட்சம் கொள்ளை போயிருந்தது. ஆனால் சேகர் வீட்டில் பணம், நகை எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, இருவரிடமும் புகார் மனுக்களை பெற்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.