ஊட்டி, ஏப். 25: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து சாலைகளுமே பழுதடைந்து காணப்படுகிறது. சீசன் துவங்கியுள்ள நிலையில் தற்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வர துவங்கி விட்டனர். மே மாதம் முடியும் வரை சுற்றுலா பயணிகள் வாகனங்களில் அதிகளவு வந்து செல்வார்கள். சாலை பழுதடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மட்டுமின்றி, உள்ளூர் வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், புழுதியின் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் நகராட்சிக்குட்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும். மேலும், அனைத்து சாலைேயாரங்களிலும் கேபிள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூட வேண்டும். தற்போது ஒரு சில சாலைகளில் மட்டும் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான சாலைகள் பழுதடைந்தே காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, பழுதடைந்த அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். முதற்கட்டமாக அனைத்து பழுதடைந்த சாலைகளில் உள்ள பள்ளங்களை மூட வேண்டும். மே மாதம் துவங்கும் முன் அனைத்து சாலைகளையும் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்