மானாமதுரை, ஏப்.19: மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுந்தனர். மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர்கோயில் சித்திரை திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஆனந்தவல்லி, சோமநாதர்பிரியாவிடைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அனம், குதிரை, காமதேனு, ரிஷப உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்பாளும் திருவீதி உலா வந்தனர்.எட்டாம் திருநாளான நேற்று முன்தினம் காலை திருக்கல்யாணம் நடந்தது. ஒன்பதாம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு ஆனந்தவல்லி அம்மனுக்கும், சோமநாதர், பிரியாவிடைக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. சோமநாதர், பிரியாவிடை பெரியதேரிலும், ஆனந்தவல்லி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். பின்னர் கட்டிக்குளம் கிராமத்தார் முன்னிலையில் தேரின் வடக்கயிறு வைக்கப்பட்டு தெய்வசிகாமணிபட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன்பின் புதுக்குளம், கீழமேல்குடி, கால்பிரவு, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த கிராம பொதுமக்கள் தேரின் வடம் பிடித்து தேர் இழுத்தனர். காலை 10.52 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் 11.36 மணிக்கு மீண்டும் நிலையை அடைந்தது. தேரில் சுவாமியும், அம்மனும் வீதிஉலா வந்த போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தேர்தலை முன்னிட்டு காலை 10 மணி வரை பக்தர்கள் கூட்டமின்றி இருந்த நிலை மாறி 10 மணிக்கு மேல் மானாமதுரையை சுற்றியுள்ள பலகிராமங்களில் ஆயரக்கணக்கான கிராமத்தினர் வந்ததும் தேர் கோயிலில் இருந்து புறப்பட்டது.