களக்காடு, ஏப். 18: திருக்குறுங்குடி பெரியகுளத்தில் பழுதடைந்துள்ள மடைகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். திருக்குறுங்குடி பெரியகுளம், இப்பகுதியின் முக்கிய நீராதாரமாக திகழ்கிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரியகுளங்களில் திருக்குறுங்குடியும் ஒன்று. இக்குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து வரும் கால்வாய் மூலம் குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் குளம் நிரம்பி ததும்பியது. அப்போது குளத்தில் உள்ள 3 மடைகளும் பழுதடைந்தன. குறிப்பாக நடுமடையில் ஏற்பட்ட பழுதால் கரையில் அரிப்பு ஏற்பட்டது. குளத்தின் தடுப்பு சுவர்களும் இடிந்து விழுந்ததால் குளம் உடையும் அபாயம் எழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. குளத்தில் தண்ணீர் நிரம்பியிருந்ததால் மடையை சீரமைக்க முடியாத நிலை நிலவியது. இதையடுத்து வேறு வழியின்றி மடை அடைக்கப்பட்டது. மேலும் குளத்திற்கு வரும் தண்ணீரும் வேறு கால்வாயில் திருப்பி விடப்பட்டது.
இந்நிலையில் தற்போது திருக்குறுங்குடி பகுதியில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. வறுத்தெடுக்கும் வெயிலால் நம்பியாறு உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வறண்டு வருகிறது. அதுபோல திருக்குறுங்குடி பெரியகுளமும் தண்ணீர் இன்றி வற்றியது. ஆங்காங்கே பள்ளங்களில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் தேங்கி உள்ளது. குளம் வறண்டு உள்ளதால் பழுதடைந்துள்ள மடைகளை சீரமைக்க இதுவே சரியான தருணம் என விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். எனவே மடைகளை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
