×

ஆத்தூர் அருகே பாலத்திற்கு அடியில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கேட்பாரற்று கிடக்கும் இருசக்கர வாகனம்

ஆத்தூர், ஏப்.17: ஆத்தூர் நகராட்சி 2வது வார்டுக்குட்பட்ட வடக்குகாடு பகுதியில் அய்யனார் கோயில் ஏரி உள்ளது. வடக்குகாடு உப்போடை பகுதியிலிருந்து சக்திநகர் செல்லும் சாலை பகுதியில் இருந்து ஏரிக்கு செல்லும் பாதையில் மயானம் ஒன்றும் உள்ளது. சக்திநகர் செல்லும் வழியில் உள்ள ஒடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தின் அருகே எரித்த நிலையில் இருசக்கர வாகனம் ஒன்று கிடப்பதை கண்டு ஆடு மேய்ப்பதற்காக சென்றவர்கள் திடுக்கிட்டனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து ஆடு மேய்ச்சலுக்காக சென்றவர்கள் கூறுகையில், கடந்த வென்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் இருசக்கர வாகனம் ஒன்றில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும், டிப்டாப் உடையணிந்த வாலிபரும் வந்து பாலத்திற்கு அருகில் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தனர். அப்போது, அந்த வாலிபர் தான் கையில் வைந்திருந்த செல்போனை காட்டி காட்டி அந்த பெண்ணிடம் பேசினார். அந்த பெண் அழுது கொண்டிருந்தார். அந்த சமயத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் 5 வாலிபர்கள் அப்பகுதியில் வட்டம் அடித்துக் கொண்டே இருந்தனர். அதன் பின்பு நாங்கள் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்து விட்டோம்.

மறுநாள் அப்பகுதிக்கு சென்றபோது பாலத்திற்கு அருகில் ஒரு இருசக்கர வாகனம் எரித்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தோம். ஆனால், யாரும் வந்து விசாரிக்கவில்லை. மேலும், மோட்டார் சைக்கிளை தேடியும் யாரும் வரவுமில்லை. எரிந்த நிலையில் கிடந்த மோட்டார் சைக்கிள் யாருடையது என்பதும் தெரியவில்லை. இந்த மோட்டார் சைக்கிள் வெள்ளிக்கிழமை மாலையில் பெண்ணிடம் பேசி கொண்டிருந்த வாலிபர் ஓட்டி வந்ததாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் அதில், வந்தவர்கள் என்னவானார்கள் என்பதும் தெரியவில்லை. திருட்டு வாகனமாக இருக்மோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் விசாரணை நடத்தாமல் இருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது என்றனர். அருகில் உள்ள சக்திநகர் பகுதியில் தான் ஜெயலலிதாவின் ஓட்டுனராக இருந்து கொடநாடு எஸ்டேடில் ஆவணங்களை திருடிய கனகராஜின் உறவினர் வீடும் உள்ளது. அந்த உறவினர் வீட்டிற்கு வந்தபோது தான் கனகராஜ் இருசக்கர வாகனத்தில் சந்தனகிரி பகுதியில் விபத்தில் சிக்கி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்நிலையில், தற்போது எரிக்கப்பட்ட நிலையில் பைக் ஒன்று மர்மமான முறையில் இப்பகுதியில் கிடப்பதும் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags : fire ,bridge ,Atoor ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா