மதுரை, ஏப். 17 : தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு மருந்து வாணிபக்கழகம் மூலம் மருந்து, மாத்திரை சப்ளை செய்யப்டுகிறது. இதற்காக வாணிபக் கழகத்திற்கு டெண்டர் விடப்படுகிறது. மருந்து, மாத்திரைகளை மாவட்டந்தோறும் இருக்கும் மருந்து சேமிப்பு கிடங்குகளில் பதப்படுத்தி வைக்கப்பட்டு, தேவையானபோது, மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். இந்நிலையில், மருத்துவ வாணிபகழகத்திற்கு டெண்டர் முடிந்து பல மாதங்களாகியும், புதிய டெண்டர்விடாததால், மருந்து மாத்திரைகளை கொள்முதல் செய்ய முடியவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள மருந்து சேமிப்பு கிடங்குகளில் மருந்து மாத்திரைகள் காலியாகி, பல மாதங்களாயின.
மதுரை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் முதல், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருந்தகங்களில் சளி, காய்ச்சலுக்கான மாத்திரைகளை தவிர, மற்ற நோய்களுக்கான மாத்திரைகளும் இருப்பு இல்லை. மதுரை அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாகவும் 3 ஆயிரம் பேரும், புறநோயாளிகளாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை ெபறுகின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இம்மருத்துவமனையில் மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது.
இது குறித்து மருத்துவமனை மூத்த மருத்துவர்களிடம் கேட்டபோது, ‘‘மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக, ரத்த அழுத்தம், இருதய நோய், சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள், தரமான ஆண்டிபயாடிக் மாத்திரைகள், சிறுநீரக மற்றும் புற்று நோய்களுக்கான மாத்திரைகள் சுத்தமாக இல்லை. இது தொடர்பாக டீனிடம் விளக்கி உள்ளோம். மாத்திரைகள் கிடைக்க அவர்தான் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.நிர்வாக பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், `தமிழ்நாடு மருந்து வாணிப கழகத்திற்கு தேவையான தொகையை கொடுத்துவிட்டோம். அவர்கள்தான் மருந்துகளை பெற்றுத்தர வேண்டும். இதற்கு காரணம் அவர்களின் சேவைக் குறைபாடுதான்’ என்றார்.
* மருந்தாளுநர்கள் கூறுகையில், ‘நோயாளிகளிடம் மாத்திரை இல்லை என்று சொன்னால் தகராறு செய்கின்றனர். அனைத்து மாத்திரைகளும் நோயாளிகளுக்கு வழங்க உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.