நாகர்கோவில், ஏப்.14: லோக் தந்திரிக் ஜனதாதளம் கட்சியின் குமரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. மாவட்ட தலைவர் வக்கீல் தெய்வராஜன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் வக்கீல் பெரியவன், மாநில செயலாளர் ஜெபமணி, தேசிய குழு உறுப்பினர் சிரில் கிறிஸ்துராஜ், மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாவட்ட இளைஞர் அணி தலைவர் அரவிந்த் வரவேற்றார். அகில இந்திய துணை தலைவர் ராஜசேகரன், மாநில தலைவர் வக்கீல் ராஜகோபால் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் எச்.வசந்தகுமார் வெற்றிக்காக தீவிர பிரசாரம் மேற்கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில செயலாளர் சரோஜினி நன்றி கூறினார். பின்னர் ராஜசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக, காங்கிரஸ் கூட்டணியை தமிழகம் முழுவதும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் லோக் தந்திரிக் ஜனதாதளம் ஆதரிக்கிறது. 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். மோடி நூறு முறை தமிழகத்திற்கு வந்தாலும் பா.ஜ இங்கு ஜெயிக்கப்போவது இல்லை. இங்கு அதிமுக மிக மோசமான ஒரு ஆட்சியை நடத்தி வருகிறது. இவர்கள் ஒரு நிமிடம் கூட ஆட்சியில் தொடர அருகதை இல்லாதவர்கள், மக்கள் ஜெயலலிதாவுக்காக ஓட்டுபோட்டனர். அதிமுகவிற்கு ஓட்டு போடவில்லை. வசந்தகுமார் மைத்துனரிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, பச்சை அயோக்கியத்தனம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.