×

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் யுகாதி பண்டிகை கொண்டாட்டம்

மேல்மருவத்தூர், ஏப்.8: யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த ஆதிபராசக்தி செவ்வாடை பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நேற்று முன்தினம் விமரிசையாக கொண்டாடினர். இதில் பங்காரு அடிகளார் ₹11 லட்சம் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். யுகாதி வருடப் பிறப்பை முன்னிட்டு ஆதிபராசக்தி சித்தர் பீடம் மலர்களால் அலங்கரிப்பட்டிருந்தது. ஆங்காங்கே அலங்கார பதாகைகள் தெலுங்கு, தமிழ், ஆங்கில மொழிகளில் வைக்கப்பட்டிருந்தன. நேற்று அதிகாலையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு  சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. அதை தொடர்ந்து பக்தர்களுக்கு யுகாதி பச்சடி பிரசாதமாக வழங்கப்பட்டது. காலை 10.30 மணியளவில் சித்தர்பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு, ஆந்திரா மற்றும் தெலங்கானா பக்தர்கள் பாதபூஜை செய்து வரவேற்றனர். தொடர்ந்து 11 மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டது. பகல் 11.45 மணியளவில் ஆன்மிக மண்டபத்தில் சிறப்பு மேடை நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் ₹11 லட்சம் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். இதில் 45 தையல் இயந்திரங்கள், 4 சலவை கற்கள் வெட்டும் கருவிகள், 10 மின்சாதனங்கள் பழுதுபார்க்கும் கருவிகள், 10 மருந்து தெளிப்பான், 4 அடுப்பு, 13 சமையல் பாத்திரங்கள், 20 கல்வி உதவித் தொகை, அன்னை இல்லத்திற்கு ₹1 லட்சம்  வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அன்னையின் 108 அற்புதங்கள் அடங்கிய தெலுங்கு புத்தகத்தை பங்காரு அடிகளார் மற்றும் லட்சுமி பங்காரு அடிகளார் வெளியிட, சிறப்பு விருந்தினர் டாக்டர் விஷ்ணுவர்தன் ரெட்டி பெற்று கொண்டார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் கோ.ப.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆந்திரா, தெலங்கானா மாநில தலைவர்கள் கங்காதாரம், சரிதா, கலாதர் செய்தனர்.

Tags : festival celebration ,temple ,Adiraparakti Sithar ,
× RELATED ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!