புதுச்சேரி, ஏப். 7:
தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னையன்பேட் பகுதிகளில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து திமுக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெங்கடேசன் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொகுதி முழுவதும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் தட்டாஞ்சாவடி பள்ளி வாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களுடன் முதல்வர் நாராயணசாமி, திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏவுடன் சேர்ந்து வாக்கு சேகரித்தார்.
நேற்று சின்னையன்பேட், ராஜேந்திரா நகர், தங்கவேல் கார்டன்,லட்சுமி நகர் கிழக்கு, விநாயகமுருகன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், சேதுசெல்வம், முருகன், செல்வம், காங்கிரஸ் துணைத் தலைவர் தேவதாஸ், எஸ்சி பிரிவு வீரமுத்து மற்றும் பரிதி, பார்த்திபன், மகேஷ்வரன், ரவி, வரதராஜன், ஜான்சன், வேலு, உள்ளிட்ட நிர்வாகிகள் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு திரட்டினர். அப்போது பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களிடம் தொகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்த வெங்கடேசன், தேர்தலில் வெற்றிபெற்றதும் உடனடியாக அவை நிவர்த்தி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.