×

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு

திருவண்ணாமலை, ஏப்.4: திருவண்ணாமலை மாவட்டத்தில், 8 இடங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேரம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவை தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக பிரித்து அனுப்பட்டுள்ளது.ஆரணி தொகுதியில் 15 வேட்பாளர் மட்டும் போட்டியிடுவதால், அந்த தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் தலா ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. திருவண்ணாமலை தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

அதையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் ஒப்புகை ரசீது இயந்திரம் ஆகியவை திருவண்ணாலை மாவட்டத்துக்கு உட்பட்ட திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசபாக்கம், ஆரணி, போளூர், செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதோடு, சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. அந்த காட்சிகளை, தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி வரும் 12ம் தேதி நடைபெறும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Tags : Tiruvannamalai district ,
× RELATED போளூரில் நெல் சாகுபடி அதிகரிப்பால்...