தர்மபுரி, மார்ச் 29: அதியமான்கோட்டையில் வெள்ளரிபழம் விற்பனை ஜோராக நடந்தது. கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க அதிக நீர்சத்துள்ள, வெள்ளரியை மக்கள் ஆர்வத்துடன் சாப்பிடுகின்றனர். வெள்ளரி பழத்தை சர்க்கரையுடன் சேர்த்தும், ஜூஸ் செய்தும் சாப்பிடுவதன் மூலம் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. தற்போது கோடை காலம் என்பதால், வெள்ளரி பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருந்து வெள்ளரி பழங்களை கொண்டு வந்த விவசாயிகள், தர்மபுரி உழவர் சந்தை, சந்தைபேட்டை காய்கறி மார்க் கெட், பெரியார் சிலை, எஸ்வி ரோடு, பாரதிபுரம், கலெக்டர் அலுவலகம் மற்றும் அதியமான் கோட்டை, ஒட்டப்பட்டி ஆகிய இடங்களில் சாலையோரம் விற்பனை செய்தனர். ஒரு பழம் தரத்திற்கேற்ப ₹50 முதல் ₹100 வரை விற்பனை செய்யப்பட்டது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.