×

அம்பை ரயில் நிலைய விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா

அம்பை, மார்ச் 28:  அம்பாசமுத்திரம் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள செல்வவிநாயகர், சம்பத் ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த 25ம் தேதி  அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 7.30 மணிக்கு மாகாப்பு அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடந்தது. வருஷாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை நடை திறக்கப்பட்டு  5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, லட்சுமி பூஜை, கணபதி ஹோமம், உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.

தொடர்ந்து மூலவர் செல்வவிநாயகர் கோபுர கலசங்களுக்கும், சம்பத் ஆஞ்சநேயர், தட்சணாமூர்த்தி, நாகர், நவக்கிரகங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகாகும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மகேஸ்வர பூஜைக்கு பிறகு அன்னதானம் நடந்தது. இரவு 7 மணிக்கு செல்வவிநாயகர், சம்பத் ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்திக்கு  புஷ்பாஞ்சலி, சிறப்பு தீபாராதனை, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.  விழாவில் ஆர்.எஸ் காலனி, நியூ காலனி, ரயில் நிலைய ஊழியர்கள், ரயில் பயணிகள், வியாபாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று தரிசித்தனர். ஏற்பாடுகளை ரயில் நிலைய அதிகாரிகள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags : Ammai Railway Station Vinayagar Temple ,
× RELATED ஆடு திருடிய வாலிபர் கைது