×

திருபுவனையை சேர்ந்த ரவுடி வெட்டு கார்த்தி குண்டாசில் அதிரடி கைது

புதுச்சேரி, மார்ச் 27: புதுச்சேரி திருபுவனையை சேர்ந்த பிரபல ரவுடி வெட்டு கார்த்தி குண்டாசில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். புதுவை அடுத்த கொத்தபுரிநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வெட்டு கார்த்தி (28). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி, வெடிகுண்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் திருபுவனை காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலிலும் வெட்டு கார்த்தி இடம் பெற்றுள்ளார்.

 இதனிடையே நாடாளுமன்ற தேர்தலை அமைதியாக நடத்தும் நோக்கில் ரவுடிகள் மீது பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ரவுடி வெட்டு கார்த்தி சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட காரணமாக இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மேற்கு எஸ்பி ரங்கநாதன், மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அருணிடம் பரிந்துரை செய்திருந்தார்.  அவரது பரிந்துரையை ஏற்றுக் கொண்ட கலெக்டர், ரவுடி வெட்டு கார்த்தியை குண்டாசில் கைது செய்ய நேற்று முன்தினம் அதிரடியாக உத்தரவிட்டார். அதன்பேரில் கலெக்டரின் உத்தரவுடன் காலாப்பட்டு சிறைக்கு சென்ற திருபுவனை இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா ஆகியோர், அங்கு ரவுடி வெட்டு கார்த்தியிடம் அதை வழங்கி அவரை குண்டாசில் கைது செய்தனர். இதன்மூலம் அவர் ஓராண்டு வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Rauti ,Thirupuanai ,
× RELATED அரும்பாக்கத்தில் ரவுடி கொலையில் மேலும் 2 பேர் கைது