குறிஞ்சிப்பாடி, மார்ச் 27: குறிஞ்சிப்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட வடக்குத்து முதல் குறிஞ்சிப்பாடி வரையிலான மிக முக்கிய பிரதான சாலை விரிவாக்க பணிகள் சில மாதங்களாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக வடக்குத்து முதல் கீழுர் வரை தார் சாலை போடப்பட்டது. 2வது கட்டமாக கீழுர் முதல் பாச்சாரப்பாளையம் வரை ஏற்கனவே இருந்த சாலை முழுவதும் பொக்லைன் இயந்திரம் மூலமாக பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் சாலை பணி நடக்கவில்லை. இங்கு சாலை விரிவாக்கம் செய்வதற்காக முன்னேற்பாடுகள், எச்சரிக்கை பலகைகள் ஏதும் வைக்கவில்லை. இதனால் அவ்வழியே வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர் சாமிநாதன் கூறுகையில், வடக்குத்து முதல் குறிஞ்சிப்பாடி வரை செல்லும் கிராம சாலை விரிவாக்க பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. வடக்குத்து, கீழூர், பாச்சாரப்பாளையம், கன்னித்தமிழ்நாடு வழியாக குறிஞ்சிப்பாடிக்கு இச்சாலை செல்கிறது.
இந்த கிராமங்களில் பயிலும் மாணவர்கள் குறிஞ்சிப்பாடி, நெய்வேலியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். கிராமங்களிலிருந்து நகர் பகுதியை இணைக்கும் முக்கிய சாலை பணியை கிடப்பில் போட்டுவிட்டனர். ஜல்லிகள் பெயர்த்து எடுத்த நிலையில் வாகன ஓட்டுனர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சாலை பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்றார்.