காரிமங்கலம், மார்ச் 26: காரிமங்கலம் அருகே கல்லூரி மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர். காரிமங்கலம் அடுத்த நாகனம்பட்டி பிரிவு சாலையில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. சுமார் 1,500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரி தேசிய நெடுஞ்சாலை 4 வழிப்பாதையில் அமைந்துள்ளதால், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இதனால், காலை மற்றும் மாலையில் சாலையை கடந்து செல்ல மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நீண்ட நேரம் காத்திருந்து சாலையை கடக்க வேண்டி உள்ளது. இது பற்றி மாணவிகள் கூறுகையில், ‘கல்லூரிக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது. இது 4 வழிச்சாலை என்பதால், உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, சாலையை எளிதாக கடந்து செல்ல மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும், கல்லூரி முன்பு வேகத்தடை அமைத்து தர வேண்டும்,’ என்றனர்.