×

ஊத்தங்கரை அருகே முதியவர் கொலையில் 2 பேர் அதிரடி கைதுஊத்தங்கரை, மார்ச் 19:

ஊத்தங்கரை அருகே முதியவர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி அருகே ஓபகாவலசை சேர்ந்தவர் வெங்கட்ராமன்(60). இவர் தனது மனைவி மங்கம்மாளுடன்(54), நேற்று முன்தினம் விடியற்காலையில் மாந்தோப்பில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பக்கத்து தோட்டத்தில் இருந்து மாங்காய் திருடிக்கொண்டு ஓடிய 3 பேரை, இருவரும் பிடிக்க முயன்றனர். அப்போது, 3 பேரும் சேர்ந்து தாக்கியதில் வெங்கட்ராமன்-மங்கம்மாள் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில் வெங்கட்ராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதனிடையே வெங்கட்ராமனை அடித்து கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி, ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை டிஎஸ்பி ராஜபாண்டியன் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தினர். இந்நிலையில், மங்கம்மாள் கொடுத்த தகவலின்பேரில், வெங்கட்ராமனை தாக்கிய, மிட்டப்பள்ளி அருகே மூன்றாம்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன்(42), சேத்துநாயக்கன்பட்டி அருகே பொம்மதாசம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக்(22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மாதையன் என்பவரை தேடி வருகின்றனர்.

Tags : murder ,Uthangarai ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...