காரிமங்கலம், மார்ச் 14: காரிமங்கலம் அருகே ஏ.சப்பாணிபட்டியில், கோயில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காரிமங்கலம் அடுத்த அடிலம் சப்பாணிபட்டியில் மகா சக்திமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 2017ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில், நேற்று அதிகாலை, கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அந்த வழியாக சென்ற மக்கள், இ தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காரிமங்கலம் போலீசார், கோயில் நிர்வாகிகள், பூசாரி மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். இதில், உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த 3 பவுன் நகை மற்றும் லட்சக்கணக்கான பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரிமங்கலம் பகுதியில் உள்ள கோயில்கள் மற்றும் வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதை தடுக்க போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவதோடு, கொள்ளையர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.