திருச்சி, மார்ச் 12: திருச்சி கே.கே.நகர் அகரா உலக பள்ளியில் 3ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சென்னை டிஏவி குழும பள்ளி இயக்குனர் விகாஸ்ஆர்யா மற்றும் அட்சயம் அறக்கட்டளையின் தலைவர் நவீன்குமார் பங்கேற்றனர். அகரா கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் பழனிரத்தினம் வரவேற்று பேசினார். ஆண்டு விழாவின் முக்கிய அம்சமாக சென்னை டிஏவி குழுமத்திற்கும், அகரா கல்வி குழுமத்திற்கும் இடையே கல்வி திட்டத்தில் இணைந்து செயல்படுவதற்கான புரிதல் ஒப்பந்தம் கையெழுத்தானது. அட்சயம் நவீன்குமார் பேசுகையில், அனைத்து சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு குடும்பத்தில் கிடைக்கப்பெறாத அன்பே காரணமாக அமைகிறது. எனவே மாணவர்கள் சமுதாயத்தில் தலைசிறந்து விளங்க அன்புடன் சேர்ந்த கல்வி முறையை பயில வேண்டும் என்றார்.
ஆண்டுவிழாவையொட்டி நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் அகரா பள்ளியின் செயலர் கருணாலதா, பழனி, தலைமை கல்வி ஆலோசகர்கள் டாக்டர் ரமணி, டாக்டர் இளங்கோ, இணை இயக்குனர்கள் ராணி, முதல்வர் முனைவர் பொற்செல்வி, துணை முதல்வர்கள் ரமா, முத்துக்குமார், கல்வித்திட்ட வடிவமைப்பாளர்கள் கவிதா, ஜெனிபர் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.மாணவி ஆமீனா ஹபீப் நன்றி கூறினார்.