கூடலூர், மார்ச் 7: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வரவேற்பு மையப்பகுதியை ஒட்டி செல்கிறது மாயாறு. இந்த ஆற்றில் வளர்ப்பு யானைகளை குளிப்பாட்ட பயன்படுத்தப்படுகிறது. யானைகள் ஆற்றில் குளிக்கும் காட்சியை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்த ஆற்றில் சமீபகாலமாக முதலைகள் நடமாட்டம் இருப்பதாக கூறி வனத்துறையினர், சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் இறங்க தடை விதித்தனர்.
இந்நிலையில், தெப்பக்காடு-கார்குடி இடையே ஆற்றங்கரை மணலில் சுமார் 12 அடி நீளம் உள்ள முதலை ஒன்று இருந்ததை கண்ட சுற்றுலா பயணிகள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் செல்வதற்குள் முதலை ஆற்றில் இறங்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஆற்றங்கரையில் முதலை படுத்திருப்பதை கண்ட சுற்றுலா பயணிகள் சிலர் தங்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.