வலங்கைமான், மார்ச்6: வலங்கைமான் அடுத்த வளையமாபுரத்தில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசியபோது தீப்பிடித்ததில் பல மீட்டர் தூரம் லாரியில் இருந்த வைக்கோல் எரிந்து கொண்டே வந்தது. லாரி டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
வலங்கைமான் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடைக்குப் பின் கால்நடை தீவனத்திற்காக வைக்கோல் பல மாவட்டங்களுக்கு லாரி உள்ளிட்ட வாகனங்களில் எடுத்து செல்லப்படுகிறது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா பகுதிக்கு அதே பகுதியை சேர்ந்த லாரியின் உரிமையாளரும், டிரைவருமான பாண்டுரங்கன் மகன் சந்திரன்(39) மற்றும் ஜெயபால் மகன் ஜெயகிருஷ்ணன்(24) ஆகிய இருவரும் வலங்கைமான் அடுத்த கண்டியூர் பகுதியிலிருந்து லாரியில் நேற்று மதியம் வைக்கோல் ஏற்றிக்கொண்டு வலங்கைமான் நோக்கி வந்தனர்.
வளையமாபுரம் பகுதியில் லாரி வந்த போது வைக்கோல் மீது மின்கம்பி உரசியதில் வைக்கோல் தீப்பற்றி எரிந்தது. குடியிருப்பு பகுதி அருகே வந்தபோது லாரி தீப்பிடித்து எரிந்ததால் லாரி டிரைவர் சந்திரன் சாமர்த்தியமாக லாரியை பல மீட்டர் தூரம் குடியிருப்புகளுக்கு அப்பால் உள்ள தரிசு வயல்களில் விட்டு தண்ணீர் உள்ள பகுதியில் லாரியை நிறுத்தினார். லாரியிலிருந்த வைக்கோல் கட்டுகள் சாலை மற்றும் தரிசு வயல்களில் விழுந்து எரிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த வலங்கைமான் தீயணைப்பு நிலையத்தினர் தீயை அனைத்தனர். பின்னர் ஜேசிபி உதவியுடன் லாரியில் எரிந்து கொண்டிருந்த வைக்கோல் கட்டுகளை கீழே தள்ளிவிட்டு தீயை அணைத்தனர். லாரியில் இருந்த நூறுகட்டு வைக்கோல் எரிந்த நிலையில் லாரி டிரைவரின் சாமர்த்தியத்தால் தீயில் எரியாமல் தப்பியது குறிப்பிடதக்கது.