ஜெயங்கொண்டம், மார்ச் 6: கங்கைகொண்ட சோழபுரம் வாரச்சந்தை ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போனது. ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் வரி வசூல் செய்யும் உரிமைக்கான ஏலம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. வாரச்சந்தையில் காய்கறிகள் விற்பனைக்கு ரூ.150, மளிகை கடைக்கு ரூ.300, பழக்கடைக்கு ரூ.150, பலகார கடைக்கு ரூ.150, கருவாடு கடைக்கு ரூ.50, கிராம காய்கறி விற்பனைக்காக ரூ.30 இதர கடைகளுக்கு ரூ.30. சந்தைக்கு வரும் மினி லாரிக்கு ரூ.200, பெரிய மினிலாரி ஒன்றுக்கு ரூ.300, லாரி ஒன்றுக்கு ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இதுமட்டுமின்றி விற்பனை செய்யப்படும் ஆடு ஒன்றுக்கு ரூ.50 வசூல் வரி செய்ய நிர்ணயிக்கபட்டு ஏலம் நடந்தது. ஏலத்தில் ரூ.2 லட்சம் வங்கி வரைவோலை செலுத்தி 35 பேர் பங்கேற்று ஏலம் கேட்டனர். இதில் குறைந்தபட்ச தொகையாக ரூ.13,92,600 நிர்ணயிக்கப்பட்டு அதற்கு மேல் ஏலம் கேட்கப்பட்டது. கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த தொகை செலுத்தியவர்கள் ஏலம் கேட்டனர். ஏலத்தில் இறுதியாக ஜிஎஸ்டி உட்பட ரூ.24.92 லட்சத்துக்கு ஏலம் முடிவடைந்தது.