×

விமான நிலையத்தில் பரபரப்பு விமானங்களுக்கு சார்ஜ் ஏற்றும் வாகனம் தீப்பற்றி எரிந்து நாசம்

சென்னை, பிப்.21: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் நிற்கும் நடைமேடைகள் உள்ளன. அதில், நடைமேடை 54 மற்றும் 55க்கு இடைபட்ட இடத்தில் விமானங்களுக்கு சார்ஜ் ஏற்றக்கூடிய கருவிகள் பொறுத்தப்பட்ட வாகனம் நிறுத்தப்படும். இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில், சார்ஜ் ஏற்றும் வாகனத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பொறி பறந்தது. சிறிது நேரத்தில் குபுகுபுவென கரும்புகை வெளியேறி வாகனம் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்ததும், விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து விமான நிலைய தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 வாகனங்களில் வீரர்கள் வந்தனர்.  அதில், ஒரு வாகனம் தீப்பற்றிய வாகனத்தை அணைக்கும் பணியில் ஈடுபட, மற்ற 2 வானங்கள் அருகில் தீ பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து, அரை மணி நேரத்தில் தீ முழுவதையும் அணைத்தனர்.
அதனை தொடர்ந்து விமான நிலைய உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில், தீப்பற்றி எரிந்த வாகனம் தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரிந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும், தீ விபத்து சம்பவம் பற்றி டெல்லியில் உள்ள டிஜிசிஏ (டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன்) விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த விபத்து நடந்த போது 54 - 55 விமான நடைமேடை பகுதியில் விமானங்கள் நின்றிருந்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டிருக்கும்.  அதேபோன்று, விமானம் சார்ஜ் செய்யப்பட்டிருந்தால் அந்த விமானமும் சேர்ந்து தீப்பிடித்திருக்கும். அதிர்ஷ்டவசமாக அதுபோன்று நடக்கவில்லை. மேலும் இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Tags : airport ,
× RELATED பெங்களூரு விமான நிலைய நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்!!