நாமக்கல், பிப்.7: நாமக்கல் தாலுகா அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு விவிபேட் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்கு சாவடிகளிலும், வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் வசதியுடன் கூடிய விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும், இந்த இயந்திரம் குறித்து தெரிந்து கொள்வதற்காக நேரடி செயல்விளக்க நிகழ்ச்சிகள், மாவட்டத்தில் உள்ள 661 வாக்குசாவடி மையங்களிலும் நடத்தப்படவுள்ளது.
இதற்காக நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 60 விவிபேட் இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, நாமக்கல் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை கலெக்டர் ஆசியா மரியம் துவக்கி வைத்து, விவிபேட் இயந்திரத்தின் பயன்பாடுகள் குறித்து அலுவலர்களுக்கு விளக்கம் அளித்தார். இதில் சப்கலெக்டர் கிராந்திகுமார்பதி, தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் பிரிவு தாசில்தார் சுப்ரமணியன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.