தர்மபுரி, பிப்.7: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட 26வது மாநாடு, இண்டூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் சின்னசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் காதர், குட்டி, சின்னராஜூ, ரத்தினவேல், மணி, முனுசாமி, காவேரி முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் துளசிமணி மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ நஞ்சப்பன், மாவட்ட துணை செயலாளர் தமிழ்குமரன், நிர்வாகிகள், மாதேஸ்வரன், விஸ்வநாதன், கிருஷ்ணன், கலைச்செல்வன், கமலாமூர்த்தி, வெங்கடேசன், விடுதலை விரும்பி, சிவன், மாணிக்கம் ராசு, கல்யாணசுந்தரம் ஆகியோர் பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேவராசன் மாநாட்டு நிறைவுரையாற்றினார். மாநாட்டில், இண்டூர் பகுதி சோமேனஅள்ளி, பாலவாடி கிராமத்தில் உயர்மின் அழுத்தம், உயர் கோபுர துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாத வாடகை ₹10 ஆயிரம், கிணறு, வீடு, நிலம், கோழிப்பண்ணை, பால்பண்ணை, மரம், செடிகளுக்கு ₹30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தர்மபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கருகி போன பயிர்களுக்கு கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும். இரவு பகலாக பணியாற்றும் டேங்க் ஆப்ரேட்டர், துப்பரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.