புதுச்சேரி, பிப். 5: கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் நடமாடும் சிசிடிவி வீடியோ காட்டி வெளியானதையடுத்து லாஸ்பேட்டை பகுதிகளில் மப்டி உடையில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுவையில் கடந்த சில வாரங்களாக கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில கும்பல் இந்த துணிகர சம்பவங்களில் ஈடுபடலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
தட்டாஞ்சாவடி விவிபி நகரில் டாக்டர் வீட்டில் நடந்த 150 பவுன் நகை கொள்ளையில் இதுவரை குற்றவாளி சிக்கவில்லை. இதனிடையே லாஸ்பேட்டை, குமரன் நகரில் முகமூடி அணிந்தபடி 2 ஆசாமிகள் ஆயுதங்களுடன் நடந்து செல்வது பதிவாகி உள்ளது.இந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இதைப் பார்த்த பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர். இவர்களுக்கும், டாக்டர் வீட்டில் நடந்த 150 பவுன் நகை கொள்ளைக்கும் தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
அதன்பேரில் கோரிமேடு, லாஸ்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி ஸ்பெஷல் பிராஞ்சு காவல் துறையும் தகவல்களை திரட்டி விசாரணையில் ஈடுபட்டுள்ளது.இதனிடையே லாஸ்பேட்டை பகுதியில் கடந்த 4 நாட்களாக போலீஸ் கண்காணிப்பு இரவு நேரங்களில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிஞ்சி நகர், குமரன் நகர், அசோக் நகர், அவ்வை நகர் உள்ளிட்ட பகுதிகளில் மப்டி உடைகளில் காவல்துறையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.