×

காந்தி நினைவு நாளையொட்டி டாஸ்மாக் மூடலால் பார்களில் பதுக்கி விற்பனை 100 மது பாட்டில்கள் பறிமுதல்

கரூர், ஜன. 31:கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மதுவிலக்கு போலீசார் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் 100க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காந்தி நினைவு தினமான நேற்று அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 30க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில், கரூர் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை சுற்றிலும் 7க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளின் அருகிலேயே பார்கள் செயல்படுகிறது. இதில், 5க்கும் மேற்பட்ட கடைகளின் அருகில், அனுமதியின்றி டாஸ்மாக் சரக்குகள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கரூர் மதுவிலக்கு போலீசார்களுக்கு நேற்று தகவல் வந்தது.

இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, எஸ்ஐ பாண்டியன் அடங்கிய குழுவினர் நேற்று பஸ் ஸ்டாண்ட் ஒட்டியுள்ள 5 கடைகளின் அருகில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கடைகளின் அருகில், கூடுதல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 105 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அனுமதியின்றி விற்பனை செய்ய முயன்றதாக கரூரைச் சேர்ந்த 5 நபர்கள் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : barracks ,Gandhi Memorial Day Taskmak ,
× RELATED திருப்பரங்குன்றம் கோயிலில் வைகாசி...